தமிழ்நாடு

கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொல்ல முயன்ற தொழிலதிபர்

Published On 2023-06-03 06:57 GMT   |   Update On 2023-06-03 06:57 GMT
  • மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
  • கொலை முயற்சி சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

திருப்பூர்:

திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி மாங்கனி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் மணிமாறனுக்கும் அவரது கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதையறிந்த மணிமாறன் தனது கள்ளக்காதலியின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதற்காக அந்த இளம்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, கள்ளக்காதலி குறித்து தவறான தகவல் எழுதி மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தை மணிமாறன் வீட்டில் வைத்து எழுதினார். அப்போது கடிதத்தில் தவறு ஏற்பட்ட போது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே போட்டுள்ளார். அதனை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

உடனே இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டதுடன், இளம்பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறும் எச்சரித்தார். இருப்பினும் மணிமாறன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார்.

மேலும் தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

அதன்படி சம்பவத்தன்று இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4பேரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் மணிமாறன் உள்ளே வரவழைத்தார். பின்னர் மாங்கனி தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர்.

மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News