தமிழ்நாடு செய்திகள்

OBC தேர்வர்களுக்கான 'கிரீமி லேயர்' தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Published On 2026-03-12 17:54 IST   |   Update On 2026-03-12 17:54:00 IST
  • OBC தேர்வர்களுக்காக 'கூடுதல் பணியிடங்களை' உருவாக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்
  • EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) இடஒதுக்கீட்டையும் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 'கிரீமி லேயர்' தகுதியை பெற்றோரின் வருமானத்தை மட்டும் வைத்து தீர்மானிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இத்தீர்ப்பின்படி, 'கிரீமிலேயர்' தகுதியை மறுபரிசீலனை செய்து 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

"பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்த ஒரு நிச்சயமான வெற்றி. OBC பிரிவினருக்கான 'கிரீமி லேயர்' அல்லாதோர் தகுதியைத் தீர்மானிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தெளிவானத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

  • கிரீமி லேயர் தகுதியைத் தீர்மானிக்கும்போது, சம்பள வருமானத்தை வணிகம் அல்லது சொத்து மூலம் கிடைக்கும் வருமானத்திற்குச் சமமாகக் கருத முடியாது
  • உண்மையான OBC தேர்வர்கள், தவறான முறையில் (இடஒதுக்கீட்டிலிருந்து) வெளியேற்றப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது
  • சிவில் சர்வீஸ் தேர்வுத் தகுதி குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை உறுதி செய்கிறது.
  • பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகளில் நிலவும் பாரபட்சமான பாகுபாடுகளை இது நிராகரிக்கிறது.
  • சமூக ரீதியாகப் பின்தங்கியிருப்பதைக் களைவதே இடஒதுக்கீட்டின் குறிக்கோள் என்பதை இது மீண்டும் நிலைநாட்டுகிறது.

தகுதியுள்ள பல OBC விண்ணப்பதாரர்களை (இடஒதுக்கீட்டிலிருந்து) வெளியேற்றக்கூடிய ஒரு நிலைப்பாட்டை NDA அரசாங்கம் ஆதரித்தது. மேலும், இடஒதுக்கீட்டின் அரசியலமைப்பு அடிப்படையிலிருந்து விலகி, EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) இடஒதுக்கீட்டையும் அது அறிமுகப்படுத்தியது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாகி முப்பது ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்றும் கூட, நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசிலும் பல OBC பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

மருத்துவ இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% OBC இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது உள்ளிட்ட சமூக நீதிப் போராட்டங்களை தி.மு.க தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. எங்களது சமூக நீதிப் பயணம் தொடர்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றும், தங்களுக்குரிய இடத்தைப் பெற முடியாமல் போன OBC தேர்வர்களுக்காக 'கூடுதல் பணியிடங்களை' உருவாக்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். மேலும், இந்த அநீதியை அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டின்படி சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Tags:    

Similar News