மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்: முதல்வர் ஸ்டாலின்
- நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமருக்கு பிடிக்கவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க. மாநில முதல் மந்திரிகளுக்கும் ஏற்படும்.
மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை.
மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையைப் பறித்தார். இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.
முந்தைய காலத்தில் பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை.
மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய கேரள முதல் மந்திரியை டெல்லி வந்து போராட்டம் நடத்த பா.ஜ.க. அரசு வைத்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்தை பேணிக் காப்பதற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.