செய்திகள்
ஆகாஷ்

நாகையில் ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்- 2 மாணவர்கள் 2 பேர் மரணம்

Published On 2018-10-17 07:32 GMT   |   Update On 2018-10-17 07:32 GMT
நாகையில் அடுத்தடுத்து ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை சிக்கலை அடுத்துள்ள ஆவராணி புதுச்சேரி ஊரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கீழ்வேளூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவரது மகன் ஆகாஷ் (வயது 18). நாகையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.

நேற்று இரவு தனது நண்பனை சந்தித்து விட்டு வீடு திரும்புவதற்காக நாகை - திருவாரூர் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்தபோது பின்னால் வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து இன்று காலை நாகப்பட்டினம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆகாஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து தந்தை ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போல நாகை அரியபத்திரப் பிள்ளை தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் முகேசும் (17) ஆகாஷ் படித்த அதே பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர்கள், அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காட்டினர். மாணவனை பரிசோதித்த டாக்டர், முகேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். முகேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனை க்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகையில் அடுத்தடுத்து ஒரே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் சாவில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்று நாகை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News