பத்ம விருது பெறுபவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
புதுடெல்லி:
நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 19 பேர் பெண்கள், 6 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடுவாழ் இந்தியர்கள், 16 பேருக்கு மறைவுக்கு பிந்தைய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காக பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. இந்த கவுரவம் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.