புதுச்சேரி

விக்கி என்ற ராஜகணபதி


ஜிப்மர் நர்சிங் பணிக்கு போலி ஆணை வழங்கி ரூ.16½ லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. பிரமுகர்

Published On 2025-04-11 10:48 IST   |   Update On 2025-04-11 10:48:00 IST
  • விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
  • மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.

இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News