இந்தியா

வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை காலி செய்யும் நிலை.. 2 மகன்களுடன் தூக்கில் தொங்கிய தாய்

Published On 2025-12-14 12:14 IST   |   Update On 2025-12-14 12:14:00 IST
  • அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
  • காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது ​​வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.

அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .

கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.

வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .

இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News