விடிய, விடிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை கதற விட்ட முப்படைகள்
- மொத்தம் 57 டிரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
- பாகிஸ்தான் மீது இந்தியா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்களது நாட்டுக்குள் இந்திய படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த முடிவு செய்தது. இந்தியாவின் வட மாநிலங்களில் தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.
இதையடுத்து, எல்லை பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர், அவந்திபுரா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர், நல், பலோடி, உத்தர்லை, குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் ஆகிய 15 நகரங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு வீசத் தொடங்கியது.
சண்டிகர் நோக்கியும் பாகிஸ்தான் டிரோன்கள் அணிவகுத்து வந்தன. இதன் மூலம் இந்தியாவின் ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி போரை தொடங்குவதாக கருதப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் அலை அலையாக டிரோன்களை இந்தியாவுக்குள் அனுப்பியது. பாகிஸ்தான் இத்தகைய செயலில் ஈடுபடும் என்று ஏற்கனவே இந்திய ராணுவம் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.
அதன்படி, ஐ.சி.யு.ஜி. (ஒருங்கிணைந்த ஆளில்லா வான் பாதுகாப்பு கருவி), யு.ஏ.எஸ். (ஆளில்லா வான் பாதுகாப்பு கருவி) மற்றும் ரஷியாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தயாராக இருந்தன.
ஒரே சமயத்தில் 15 நகரங்கள் மீது டிரோன்களை பறக்க விடுவதால் இந்தியாவை திணறடிக்கலாம் என்று பாகிஸ்தான் கருதியது. ஆனால் இந்திய விமானப்படை அந்த டிரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது.
நேற்று இரவு நீண்ட நேரத்துக்கு இந்த பதிலடி நடந்தது. மொத்தம் 57 டிரோன்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அதன் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் அடங்கவில்லை.
டிரோன்களை தொடர்ந்து பாகிஸ்தானின் போர் விமானங்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய தொடங்கின. இதையடுத்து இந்திய விமானப்படை தனது அதிரடி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து பாகிஸ்தானின் 4 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. அந்த போர் விமானத்தையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதனால் 3 நாள் போரில் பாகிஸ்தான் 5 போர் விமானங்களை இழந்து இருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவை லேசாக சீண்டி பார்த்த பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட இந்திய முப்படைகளும் முடிவு செய்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அடுத்தடுத்து அதிரடி தாக்குதலை தொடங்கின. விடிய விடிய இந்த தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர், ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் உள்பட பல நகரங்கள் இந்திய முப்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாயின. இந்திய படைகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டது.
பாகிஸ்தானுக்கு கொடுக்கும் அடி மரண அடியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்ததால் நேற்று முதல் முதலாக கடற்படையும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. ஏற்கனவே அரபிக்கடலில் இந்தியாவின் அதிநவீன விமான தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் நிறுத்தப்பட்டது.
அந்த கப்பல் நேற்று இரவு பாகிஸ்தானை நோக்கி நகர்த்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து ஏவுகணை மூலம் கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது பாகிஸ்தான் ராணுவத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானின் முக்கிய ஒருங்கிணைப்பு அமைப்புகளை தாக்குதல் நடத்தி அழிக்க இந்தியா முடிவு செய்தது. அதன்படி லாகூர் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்களை குறிவைத்து இந்தியப் படைகள் நேற்று 'ஹார்ப்பி' என்ற தற்கொலை படை டிரோன்களை வீசின.
இவற்றின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில், லாகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தானின் அதிநவீன உளவு விமானமும் தகர்த்து எறியப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள 3 நகரங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் உறுதி செய்து உள்ளது. ராவல் பிண்டி, அட்டோக், கோட்கி ஆகிய 3 நகரங்களில் இந்தியா டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு தெரிவித்து உள்ளது.
இந்த 3 நகரங்களிலும் தலா ஒருவர் வீதம் 3 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது.
இதே போல் கராச்சி துறைமுகம் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனர் அகமது ஷெரீப் உறுதிப்படுத்தினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலும் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வாலாட்டியது. எல்லை நெடுக பீரங்கி தாக்குதலை தீவிரப்ப டுத்தியது. இன்று அதிகாலை நடந்த பீரங்கி தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லைப் படை வீரர்கள் தீவிர எதிர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இதனால் எல்லையில் கூடுதல் பதட்டம் நிலவுகிறது. மக்கள் எல்லைகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.
நேற்று இரவு 8.30 மணிக்கு பாகிஸ்தான் வாலாட்ட தொடங்கியதும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் முழுமையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த 3 மாநிலங்களும் இருளில் மூழ்கின. இன்றும் இந்த மாநிலங்களில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மக்கள் அமைதியாக வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்த தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான உத்தரவுகளை இன்று காலை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானின் தலை பகுதியான இஸ்லாமாபாத், இதயம் பகுதியான லாகூர் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அந்த நகரங்கள் சேதம் அடைந்து உள்ளன.
மேலும் 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போருக்கு பிறகு தற்போது கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படை மிகப்பெரிய தாக்குதலை நடத்தி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.