ராஜஸ்தானில் தனியார் நிறுவன பெண் மேலாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை- 3 பேர் கைது
- பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
- தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. அப்போது பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார். இதையடுத்து காரில் பெண் மேலாளர் ஏறினார். காரில் தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா மற்றும் பெண் உயர் அதிகாரியின் கணவர் சரோஹி ஆகியோரும் இருந்தனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை ஜிதேஷ் சிசோடியா, சரோஹி ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டில் இறங்கிவிட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்த பின், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த பெண் மேலாளர், போலீசில் புகார் செய்தார்.
அதில் தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை வாங்கி எனக்கு கொடுத்தனர். அதை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, சரோஹி மற்றும் உடந்தையாக இருந்த பெண் உயர் அதிகாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.