மருத்துவமனையில் நகையை திருடி வாயில்போட்டுக்கொண்ட பெண்... எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த போலீசார்!
- கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
- இனிமா கொடுத்துப் பார்த்தும் நகை வெளியே வரவில்லை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் நலம் பாதித்த தனது 2 வயது பெண் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க, நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றிருந்தார். அப்போது குழந்தை மருத்துவமனையின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை கிராம் எடையுள்ள தங்க நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், அந்த பகுதியில் தேடிப்பார்த்தார்.
ஆனால் குழந்தையின் நகை கிடைக்கவில்லை. காணாமல் போன தனது குழந்தையின் நகை குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, இளம்பெண் ஒருவர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்ததாக கூறினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் சென்று குழந்தையின் தாய் கேட்டார்.
ஆனால் அவர் சரியாக பதில் கூறவில்லை. ஆனால் அந்த பெண்தான், குழந்தையின் நகையை திருடியிருக்க வேண்டும் என்று அனைவரும் கருதினர். ஆகவே அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, குழந்தையின் தாய் உள்ளிட்டோரால் குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் அவர் தனக்கு தெரியாது என்றே கூறினார். இருந்தபோதிலும் அவரின் மீதான சந்தேகம், போலீசாருக்கு விலகவில்லை. ஆகவே அவரை கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர்.
அப்போது காணாமல் போன குழந்தையின் தங்க நகை, இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்தது தெரிந்தது. அந்த பெண் நீலம்பூர் பகுதியை சேர்ந்த சமீனா (வயது35) என்பது கண்டறியப்பட்டது. கிளினிக்கில் குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது.
பின்பு மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, திருடிய நகையை தனது வாய்க்குள் போட்டு விழுங்கியிருக்கிறார். அது அவரது வயிற்றுக்குள் இருந்தது எக்ஸ்ரேயில் தெரிந்துவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சமீனா வயிற்றுக்குள் இருக்கும் தங்க நகையை வெளியே எடுப்பதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து இனிமா கொடுத்தனர். ஆனால் பல முறை முயற்சி செய்தும், இளம்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து தங்க நகை மட்டும் வெளியே வரவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். அதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திவருகின்றனர். இனிமா கொடுத்து எடுப்பது எளிமையான விஷயம் என்பதால், அந்த முறையே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.