பணிபுரியும் இடங்களில் அதிகரிக்கும் சாதி பாகுபாடு.. கார்கே கவலை
- தலித் பெண் ஒருவர் சமைத்த உணவை, தங்கள் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்றனர்.
- குஜராத்தில் சாதி பாகுபாடு காரணமாகத் தலித் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்தார்.
நாடு முழுவதும் பணியிடங்களில் அதிகரித்து வரும் சாதி பாகுபாடு குறித்து மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கவலை தெரிவித்தார்.
நேற்று அவையில் பேசிய அவர், "ஒடிசாவில் தலித் பெண் ஒருவர் சமைத்த உணவை, தங்கள் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று மாதங்களாக அங்கன்வாடி மையத்தை புறக்கணித்துள்ளனர்.
21ஆம் நூற்றாண்டில் சமூக மேம்பாடு மற்றும் சமூக சீர்திருத்தம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய பாகுபாடுகள் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியின் அடித்தளத்தையே பாதிக்கின்றன.
இது அரசியலமைப்புச் சட்டத்தின் 21A-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள கல்வி உரிமையைப் பாதிக்கும் செயல்.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம், கடந்த ஆண்டு குஜராத்தில் சாதி பாகுபாடு காரணமாகத் தலித் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போன்றவை சாதி பாகுபாடு என்பது சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், பணிபுரியும் இடங்களிலும் பரவலாக இருப்பதை காட்டுகிறது.
சரியான நேரத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற தொடர் சம்பவங்களைத் தடுத்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.