பெங்களூருவில் பள்ளிப் பேருந்து சக்கரத்தில் சிக்கி இரண்டு பெண் குழந்தைகள் பரிதாப பலி!
- திருப்பத்தில் செல்லும்போது, பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது.
- ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை ஓட்டுநர் ஏற்படுத்தியுள்ளார்
பெங்களூருவின் தனிசந்திரா பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியதில், 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டி ஆர்ம்டு ரிசர்வ் பிரிவில் காவலராகப் பணியாற்றும் நாகனாகவுடா என்பவர் நான்கு நாட்களுக்கு முன்புதான் ராய்ச்சூரில் இருந்து தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மாமாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பால்வாங்கச் சென்றுள்ளார். அப்போது தனிசந்திரா காவல் குடியிருப்பு அருகே, திருப்பத்தில் செல்லும்போது, பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார் நாகனாகவுடா. ஆனால் பேருந்து ஓட்டுநர் ப்ரேக் போடாமல் அதேவேகத்தில் வந்து எதிரே நின்ற ஸ்கூட்டர்மீது மோதினார்.
இதில் ஸ்கூட்டரில் முன்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் பேருந்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் முழுவதும் அருகிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் நாகனகவுடாவுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து ஹென்னூர் போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுநர் மாரப்பாவை கைது செய்துள்ளனர். ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை அவர் ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.