இந்தியா

Startup தொடங்க பணம் தர மறுத்த தாய்-தந்தையை குத்திக் கொன்ற பெங்களூரு பொறியாளர்

Published On 2026-02-12 13:20 IST   |   Update On 2026-02-12 13:21:00 IST
  • ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன், பல் மருத்துவரான தனது மனைவியுடன் வசித்து வந்தார்
  • தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று கூறினர்.

ஸ்டார்ட்அப் தொழிலுக்குப் பணம் தராததால் பெற்ற தாய் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது.

பெங்களூரு விஞ்ஞான் நகர் பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திர பட் (60), பல் டாக்டரான அவரது மனைவி ஷியாமளா பட் (55) உடன் வசித்து வந்தார்.

இவர்களின் மகன் ரோகன் சந்திர பட் (33), அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு திரும்பினார்.

பெங்களூருவிலேயே புதிதாக ஸ்டார்ட்அப் தொழில் தொடங்க விரும்பிய அவர் முதலீட்டைத் திரட்ட முடியாமல் இருந்த நிலையில் பெற்றோரிடம் நிதி உதவி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

ஆனால் தங்களால் அவ்வளவு பணத்தைத் தர முடியாது என்று பெற்றோர் கூறியதால் ஆத்திரத்தில் இருந்த ரோகன், அவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் சில காலத்திற்கு முன்பு ரோகன் சந்திர பட், வர்த்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று,  தாய், தந்தை வீட்டுக்கு சென்ற ரோகன் சந்திர பட், காலை 8 மணியளவில் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், காயமடைந்த தம்பதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ரோகன் சந்திர பட்-ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News