படித்து அரசு வேலையில் இருக்கும் மாப்பிள்ளைகளுக்கு தட்டுப்பாடு - பீகாரில் ஆண்களை கடத்தி கட்டாய திருமணம்!
- திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்,பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடி வருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பீகார் மாநிலத்தில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி படித்த மாப்பிள்ளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நல்ல மாப்பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருக்கும் சிலர் ஆண்களை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற ஒரு திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சமஷ்தி பூர் மாவட்டம், பகார் கிராமத்தை சேர்ந்தவர் நிதீஷ் குமார். பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தார். பக்கத்து கிராமமான சக்கரஜா அலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய்.
இவரது குடும்பத்தினர் போலீஸ் வேலைக்கு தயாராகி வரும் நிதிஷ் குமாரை தங்களது மருமகனாக்க விரும்பினார்கள். நிதீஷ் குமாரின் நடவடிக்கைகளை சங்கர் ராய் குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.
கடந்த 7-ந்தேதி நிதிஷ்குமார் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சங்கர் ராய் குடும்பத்தினர் காரை எடுத்து வந்து நிதிஷ்குமாரை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.
நிதீஷ்குமார் கத்தி கூச்சலிட்டதால் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் நிதிஷ்குமாரின் வாயில் வலுக்கட்டாயமாக போதை மருந்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் மயக்கமடைந்தார்.
சங்கர் ராய் குடும்பத்தினர் மோர்வாலில் உள்ள கோவிலுக்கு அவரை கொண்டு சென்றனர். தங்களது மகள் லட்சுமி குமாரிக்கு மணப்பெண் அலங்காரம் செய்தனர். அதேபோல் நிதீஷ் குமாருக்கும் புது உடைகளை அணிவித்து அலங்கரித்தனர்.
பின்னர் வலுக்கட்டாயமாக நிதீஷ் குமாரை லட்சுமி குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர். அங்கிருந்த ஒருவர் திருமண நிகழ்ச்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தனர். நூலகத்திற்குச் சென்ற மகன் திரும்பி வராததால் இதுகுறித்து அவரின் பெற்றோர் சமஷ்தி பூர் போலீசில் மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தனர். போலீசார் சங்கர் ராய் வீட்டிற்கு சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிதீஷ் குமாரை மீட்டனர்.
தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த சங்கர் ராய் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராய் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி முடித்த வாலிபர்களை குறி வைத்து கட்டாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1224 ஆண்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளனர்.
பெண்களின் பெற்றோர் வாலிபர்களை கடத்திச் சென்று ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
பீகார் மாநிலத்தில் திருமணமாகாத ஆண்களுக்கு இது போன்ற திருமணங்கள் பெரும் சோதனையாக மாறியுள்ளது.