இந்தியா

பிரதமர் மோடிக்கு இப்போதாவது கேட்குமா? - 'பாரத் பந்த்'க்கு ராகுல் ஆதரவு

Published On 2026-02-12 11:42 IST   |   Update On 2026-02-12 11:53:00 IST
  • போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு.
  • தொழிலாளர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் - ராகுல் காந்தி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறது.

29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில் போராட்டத்திற்க்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.

அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.

மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான பிடி இன்னும் அதிகமாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News