இந்தியா

ரூ.2 லட்சத்தை ரூ.3 லட்சம் ஆக்குவேன்.. 3 பேரை ஏமாற்றி விஷ லட்டு கொடுத்து கொன்ற போலி பாபா கைது

Published On 2026-02-12 08:55 IST   |   Update On 2026-02-12 08:55:00 IST
  • 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாக நம்பவைத்துளார்.
  • இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

விசாரணையில் அவர்கள் அனைவரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட ரண்தீர் (76), சிவ நரேஷ் (42) மற்றும் லட்சுமி (40) ஆகிய மூவரை தன்வர்ஷா - அதாவது பண மழை பொழிய வைக்கும் சடங்கு செய்வதாக கம்ருதீன் பாபா என்ற சாமியார் நம்பவைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத்தைச் சேர்ந்த 72 வயதான கம்ருதீன் பாபா தாந்த்ரீக மையம்நடத்தி வந்துள்ளார்.

2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், அதனைச் சடங்குகள் மூலம் 3 லட்சம் ரூபாயாக மாற்றித் தருவதாகக் கூறி மூவரையும் கம்ருதீன் நம்ப வைத்துள்ளார்.

அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பணத்தைத் திருடுவதற்காக விஷம் கலந்த லட்டுகளை அவர்களுக்குக் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு மது மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று காருக்குள் நான்காவதாக ஒரு நபர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அது கம்ருதீன் என்பது உறுதி செய்யப்பட்டது.

முதலில் போலீசாரை திசைதிருப்ப முயன்ற அவர், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கம்ருதீன் இதற்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

Similar News