சுப்ரீம் கோர்ட் நீதிபதியிடம் மன்னிப்பு கோரிய நேரு: கடிதம் வெளியிட்டு புகழ்ந்த ஜெய்ராம் ரமேஷ்
- ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேரு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு நேரு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொது செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நிர்வாகத்துறை, நீதித்துறை இடையிலான உறவுகள் அதிகம் பேசப்படுகிறது. 1959, ஜூன் 26 அன்று அப்போதைய பிரதமர் நேரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி விவியன் போசுக்கு எழுதிய ஒரு அசாதாரண மன்னிப்புக் கடிதத்தைப் பகிர்ந்துள்ள அவர், நேரு சிறந்த நிறுவன கட்டமைப்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நேரு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கடந்த பல நாட்களாக நான் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு எழுதுவது எனது நோக்கமாக இருந்தது. ஆனால் எனது பயணம் காரணமாக, என்னால் அதை செய்ய முடியவில்லை. கல்கத்தா வழக்கறிஞர் சங்க செயலாளரிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது.
அதில் உங்களைப் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பியிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கருத்துக்கள் முறையற்றவை என்பதை நான் உணர்கிறேன். என்னிடம் கேள்வி கேட்கப்பட்ட நேரத்தில் வேறு பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். நான் செய்த இந்தச் செயலுக்கு நீங்கள் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என எழுதியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.