மக்களின் ஆதரவால் சாதிக்க முடிந்தது- பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம்
- நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், உங்களின் ஆதரவே எனக்கு மகத்தான பலத்தை அளித்தது.
- நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களது ஆதரவு, சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தனது அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். இதற்காக அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:-
நாட்டு மக்கள் அனைவருமே எனது குடும்பத்தினர். 140 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டோம். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமே மிகப்பெரிய சாதனையாகும்.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. மின்சார வசதி, அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், குடிநீர், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு நிதியுதவி, பெண்களுக்கு உதவி உள்ளிட்ட பல திட்டங்கள் உங்களின் நம்பிக்கையின் காரணமாகவே சாத்தியமானது.
ஜி.எஸ்.டி. அமலாக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370-வது பிரிவை ரத்து செய்தது, முத்தலாக் குறித்த புதிய சட்டம், மகளிர் இடஒதுக்கீடு, பாராளுமன்ற புதிய கட்டிடம் மற்றும் தீவிரவாதம், நக்சலைட்டு பிரிவினைவாதம் ஆகிய அனைத்தும் உங்கள் நம்பிக்கை ஆதரவால் சாதிக்க முடிந்தது.
நாட்டின் நலனுக்காக துணிச்சலான முடிவுகளை எடுக்கவும், லட்சிய திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயல்படுத்தவும், உங்களின் ஆதரவே எனக்கு மகத்தான பலத்தை அளித்தது. நாட்டை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களது ஆதரவு, சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.