இந்தியா

மாப்பிள்ளைக்கு மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்.. ஆனால் அரசு வேலை இல்லை என திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

Published On 2024-11-27 13:34 IST   |   Update On 2024-11-27 13:37:00 IST
  • திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் இல்லை, தனியார் இன்ஜினீயர் என்று தெரியவந்தது.
  • மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் மணப்பெண் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இந்திய சமூகத்தில் ஆண்- பெண் மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை ஆண்கள் திருமண வரன் தேடும்போது உள்ளாகும் அவஸ்தையிலிருந்து புலனாகும். அப்படியே ஒரு வரன் கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு கண்டிஷனுக்கு ஆளாக வேண்டி உள்ளதாக மகன்களை பெற்ற பெற்றோர் நோந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் மாப்பிள்ளை மாதம் 1.2 லட்சம் சம்பளம் வாங்கினாலும் அரசு வேலையில் இல்லை என்று கூறி மாலை மாற்றும் கடைசி நொடியில் மணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரை சேர்ந்த இன்ஜினீயருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் என்றும் மாதம் 1.2 லட்சம் சம்பளம் என்றும் இடைத்தரகர் கூறியுள்ளார். கவர்மெண்ட் மாப்பிளை என்றதும் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கவே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமண சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது மாப்பிள்ளை கவர்மெண்ட் இன்ஜினீயர் இல்லை, தனியார் இன்ஜினீயர் என்று மணப்பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது.

 

இதை மணப்பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் மணப்பெண் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே மாலை மாற்றும்போது அவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இரு வீட்டாரும், கல்யாணத்துக்கு வந்தவர்களும் பெண்ணை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். மாப்பிள்ளையும் அவசரமாக நிறுவனத்தை போன் மூலம் அணுகி தனது சம்பள ரசீதை பெற்று அதை பெண்ணிடம் காண்பித்தார்.

அதில் அவர் ரூ.1.2  லட்சம் மாத சம்பளமாக அந்த தனியார் நிறுவனத்தில் வாங்குவது உறுதியானது. ஆனாலும் கவர்மண்ட் மாப்பிள்ளை கனவிலிருந்த பெண் ஒரே அடியாகத் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இதனால் திருமண ஏற்பாட்டுக்கு ஆன செலவை இரு வீட்டாருக்கும் பகிர்ந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு அவரவர் அவரவர் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினர். 

Tags:    

Similar News