செய்திகள்

பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published On 2018-10-22 11:00 GMT   |   Update On 2018-10-22 11:00 GMT
பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். #PetrolPumpsStrike #Kejriwal
புதுடெல்லி:

டெல்லியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் பங்குகள் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விநியோக மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவின் மிரட்டல் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-


ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் வருமான வரித்துறை சோதனை நடக்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை பாஜகவினர் மிரட்டியுள்ளனர். ஸ்டிரைக்கில் ஈடுபடாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எண்ணெய் நிறுவனங்களும் மிரட்டி உள்ளன.

நான்கு பெருநகரங்களில் டெல்லியில்தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு. அதிகபட்ச விலை இருந்தும்கூட மும்பையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘பாஜக இந்த ஸ்டிரைக்கை நடத்துவதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு ஆதரவு அளிப்பதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்’ என கெஜ்ரிவால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.  #PetrolPumpsStrike #Kejriwal
Tags:    

Similar News