செய்திகள்

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டி தேர்தல் நடத்தவே விவசாயிகளுக்கு சலுகை - காங். குற்றச்சாட்டு

Published On 2018-07-05 05:52 GMT   |   Update On 2018-07-05 05:52 GMT
பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடிக்கு சலுகைகள் அறிவித்துள்ளார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம் சாட்டி உள்ளார். #MSPHike #Congress
புதுடெல்லி:

பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு பல சலுகைகள் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் பருத்தி மற்றும் பருப்பு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றுக்கும் ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடிக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் ரீதியாக பயன் அளித்தாலும் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடிக்கு சலுகைகள் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற வேண்டிய தேர்தலை முன் கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது என்றார்.

விவசாயிகளுக்கு மோடி வாக்குறுதி அளித்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் தாமதமாகத்தான் அறிவித்துள்ளார். இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள ஆதரவு விலையின் மூலம் உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிக்கும். இந்த விலை ஏற்றத்தை இந்த அரசால் அமல்படுத்த முடியாது. அடுத்து 2019-ல் வரும் அரசாங்கம்தான் அமல்படுத்தும். அப்போது மோடி பிரதமராக இருக்கமாட்டார்.

தற்போது மோடி அறிவித்துள்ள ஆதரவு விலையை காட்டிலும் 2009-2014-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் கூடுதலாக உயர்த்தப்பட்டது. எனவே உண்மையான விலை அதிகரிப்பு கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வேளாண் விளை பொருள் உற்பத்தி- விற்பனை தொடர்பான தவறான புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #MSPHike #Congress #NarendraModi
Tags:    

Similar News