தச்சநல்லூரில் வக்கீல் வீட்டில் முட்டை வீசி ரகளை செய்த பெண் கைது
- தங்கத்துரை தனது வீட்டை பேச்சிமுத்து என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.
- தங்கத்துரைக்கும் உமா மகேஸ்வரிக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் தங்கத்துரை. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள வீட்டை வக்கீலான பேச்சிமுத்து(வயது 33) என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், தங்கத்துரைக்கும் அவரது சகோதரியான சுரண்டையில் வசித்து வரும் உமா மகேஸ்வரிக்கும்(வயது 26) சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் பாலாஜி அவென்யூவில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது என்று உமா மகேஸ்வரி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பேச்சிமுத்து முறைப்படி வாடகை செலுத்தி வருவதாகவும், தன்னை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி அந்த வீட்டின் கதவில் முட்டைகளை வீசியும், மின்சார பெட்டியை உடைத்தும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.