தமிழ்நாடு செய்திகள்

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதலமைச்சரிடம் அதிகாரிகள் குழு அறிக்கை தாக்கல்

Published On 2025-12-30 15:17 IST   |   Update On 2025-12-30 15:17:00 IST
  • இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
  • அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.

இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்.ஐ.சி. உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது. முழு அறிக்கையை டிசம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கை தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் அனைவரின் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News