உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடியுடன் சேர்ந்து கச்சத்தீவை மீட்பேன்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-04-01 11:01 GMT   |   Update On 2024-04-01 11:01 GMT
  • கச்சத்தீவில் இருந்து 2 மைல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
  • பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடினார். பின்னர் ஈர உடையுடன் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் மகன் ரவீந்திரநாத்துடன் சென்று நீராடிய பின்னர் சுவாமி, அம்பாள் சன்னதியில் பயபக்தியுடன் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட ஏரகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் காசி, ராமேசுவரம் புண்ணிய பூமியாக விளங்குகிறது. காசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இங்கு போட்டியிடும் எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

தற்போது கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு கச்சீத்தீவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு சொந்தமானதாக இருந்தது. இது தொடர்பான தகவல் தாமிர பட்டயத்தில் உள்ளன. 1974-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசும், தி.மு.க. அரசும் இணைந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள்.

அதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி 2 மைல் தொலைவிற்கு சென்று நமது மீனவர்கள் மீன்பிடித்து வந்தார்கள். ஆனால் தாரைவார்க்கப்பட்ட பின்பு கச்சத்தீவில் இருந்து 2 மைல் முன்பே மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அதனை மீறி செல்பவர்களை இலங்கை கடற்படை கைது செய்தும், விரட்டியடித்தும் வருகிறது. தற்போது பிரதமர் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். அவருடன் இணைந்து கச்சத்தீவை மீட்டு இந்த மாவட்ட மக்களுக்கு கொடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News