வேலூர் தோட்டப்பாளையத்தில் சி.எம்.சி. டாக்டர்கள் குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
- சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் 7 பேர் வந்தனர்.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 பேர் டாக்டரின் அறையில் ஒரு வாரம் தங்கி இருந்து உள்ளனர்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் சி.எம்.சி. டாக்டர்கள் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் 7 பேர் வந்தனர்.
மேலும் அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வந்தனர். அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் முன் பகுதியில் இருந்த கதவை இழுத்து பூட்டினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் நுழைந்து சோதனை செய்தனர். குடியிருப்பில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
முதற்கட்ட விசாரணைகள் கேரளாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் சி.எம்.சி.யில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 பேர் டாக்டரின் அறையில் ஒரு வாரம் தங்கி இருந்து உள்ளனர்.
டாக்டருடன் தங்கி இருந்தவர்களுக்கும், டாக்டருக்கும் என்ன தொடர்பு இருந்தது என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சி.எம்.சி. வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.