நடத்தையில் சந்தேகம்: பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்- நெல்லையில் கொடூரம்
- செல்போனில் தொடர்ந்து பேசியதால், மனைவி மீது சந்தேகம்.
- பிரிந்து சென்று 2 வருடம் ஆன நிலையில், மீண்டும் குடும்பம் நடத்த வர மறுப்பு.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள மேலபாலாமடை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 29). இவருக்கும், சண்முகாபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் (24) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பேச்சியம்மாள் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை சுதாகர் கண்டித்தார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார்.
இதனால் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சியம்மாள் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்தார்.
அதன்பிறகு பேச்சியம்மாள் நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தினமும் பாலாமடையில் இருந்து அரசு டவுன் பஸ்சில் சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் சுதாகர் தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தும் அவர் செல்லவில்லை. இதனால் சுதாகர் ஆத்திரத்தில் இருந்தார். இன்று காலை பேச்சியம்மாள் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு பஸ்சில் நெல்லை சந்திப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து அதே பஸ்சில் சுதாகரும் வந்துள்ளார். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இறங்கிய பேச்சியம்மாள் அங்குள்ள நிழற்குடையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுதாகர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த சுதாகர் அரிவாளால் பேச்சியம்மாளை கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பேச்சியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சுதாகரை கைது செய்தனர்.