உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளி- பெண்ணிடம் பணம், தங்க நகைகள் மோசடி- சபை ஊழியர், மனைவி மீது வழக்கு

Published On 2022-10-08 09:37 GMT   |   Update On 2022-10-08 09:37 GMT
  • ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார்.
  • ஆத்திரம் அடைந்த நவராஜன், பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

களக்காடு:

வள்ளியூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் தேவதாசன் மகன் நவராஜன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு களக்காடு அருகே மேலக்காடுவெட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

அப்போது, இவரும், இவரது மனைவி எல்சிராணியும், மேலக்காடு வெட்டியை சேர்ந்த தொழிலாளி ஜான் கருப்பசாமியிடம் (வயது46) சொந்த வீடு கட்டுமான பணி நடைபெறுவதாகவும், அதற்காக கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறி, அதற்காக ரூ.80 ஆயிரம் கேட்டுள்ளார்.

இதை நம்பிய ஜான் கருப்பசாமி நவராஜனுக்கு ரூ.80 ஆயிரம் கடனாக கொடுத்தார். இதுபோல அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி பொன்னுத்தாயிடம் 6 பவுன் தங்க நகைகளை நவராஜனும், அவரது மனைவி எல்சிராணியும் கடனாக பெற்றுள்ளனர்.

பின்னர் பணத்தையும், தங்க நகைகளையும், திரும்ப கொடுக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று ஜான் கருப்பசாமி களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவராஜனிடம், ஜான் கருப்பசாமி பணத்தை திரும்ப கேட்டார்.

அதற்கு ஆத்திரம் அடைந்த நவராஜன், பணத்தை தர முடியாது, இனிமேல் பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக சபை ஊழியர் நவராஜன், அவரது மனைவி எல்சிராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News