உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - 3வது நீதிபதி நாளை பிற்பகல் விசாரணை

Published On 2023-07-05 19:19 IST   |   Update On 2023-07-05 19:19:00 IST
  • அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
  • தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை:

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறினர். இதனால் இவ்வழக்கில் 3-வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, இன்று இவ்வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயனை மூன்றாவது நீதிபதியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது நாளை பிற்பகல 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி நாளை விசாரிக்கவுள்ளார்.

Tags:    

Similar News