மானாமதுரையில் இன்று அமமுக ஒன்றிய செயலாளர் படுகொலை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார்.
மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சிக்காக மோட்டார் சைக்கிளில் வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. அவர்களை கண்டதும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
பலரும் நடைபயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மானாமதுரை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா? அல்லது பேரூராட்சி ஒப்பந்தப்பணி விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடை பெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.