திருப்பூரில் விலை சரிவால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்
- கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது
- சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வருகிறார்கள். இதுபோல் விவசாயிகளிடம் இருந்தும் வியாபாரிகள் வாங்கி வந்தும் விற்பனை செய்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விற்பனையாகாத பூக்களை ஆங்காங்கே கொட்டி வரும் அவலம் நடந்து வருகிறது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது முகூர்த்த தினம் , கோவில் நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் பூக்களின் தேவை குறைவாக உள்ளது. ஆனால் வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
இருப்பினும் விற்பனையாகாத பூக்களை மீண்டும் கொண்டு சென்றால் அதற்கான வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகம் ஆகும். மீண்டும் இந்த பூக்களை விற்பனை செய்ய முடியாததால் சந்தையிலேயே குப்பையில் கொட்டி செல்கிறோம் என்றனர்.