பழனி கோவிலில் அக்னிசட்டி ஏந்தி ஜப்பான் பக்தர்கள் வழிபாடு
- அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்துக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். 25 ஆண்கள், 25 பெண்கள் என அவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் நடந்த யாகத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பால்குடம் எடுத்து கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன் பின் திருஆவினன்குடி கோவில், குழந்தை வேலாயுத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
இதனை உள்ளூர் பக்தர்கள் மிகுந்த வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து இக்குழுவினர் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.