செய்திகள்

புதுக்கோட்டை அருகே பெண்களை தாக்கி கடையை சூறையாடிய திமுக நிர்வாகி

Published On 2019-02-27 11:29 GMT   |   Update On 2019-02-27 11:29 GMT
புதுக்கோட்டை அருகே தி.மு.க.வினர் பெண்களை தாக்கி கடையை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன்.

இவர் திருமயம் பைரவர் கோவில் பகுதியில் தேங்காய் விற்பனை கடை நடத்தி வருகிறார். மேலும் கோவிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

அதே கோவில் பகுதியில் தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் வாசுகி. இவரிடம் சிவராமன் சென்று தேங்காய் கடையை காலி செய்யுமாறு கூறினார். இதற்கு வாசுகி மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றும் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன், சிவராமன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசுகியை தாக்கினர். பின்னர் வாசுகிக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்கள் கவுரி உள்பட 3 பேரையும் தாக்கி விட்டு, வாசுகியின் கடையையும் சூறையாடினர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாசுகி, கவுரி உள்ளிட்ட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து திருமயம் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த நேரத்தில் தி.மு.க.வினர் பெண்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMK
Tags:    

Similar News