செய்திகள்

ஜெயலலிதா மரணம் விசாரணை கமி‌ஷனில் உண்மையை சொல்வேன் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-02-06 05:40 GMT   |   Update On 2019-02-06 05:40 GMT
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் உண்மையை மட்டுமே சொல்லப்போவதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #ADMK #JayalalithaaDeath #Sasikala
சென்னை:

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா அவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்தார். எனக்கு தெரியாமல் அம்மாவுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டது. இப்போதுதான் எனது கவனத்துக்கு வந்தது. எனவே மன்னிக்க வேண்டும் என்று அம்மாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அம்மாவும் மன்னித்து சசிகலாவை மட்டும் தான் உதவியாளராக நியமித்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னால் நீக்கப்பட்ட மீதமுள்ள 15 பேரையும் நீக்கியது நீக்கியதுதான் என்று அம்மா அதற்கு பின்னால் அந்த கடிதம் பற்றி பொதுக்குழுவிலேயே வெளிப்படையாக பேசினார். இன்றுவரை அந்த நிலைதான் நீடிக்கிறது.

நான் தர்மயுத்தம் ஆரம்பித்ததற்கு பின்னால் இந்த இயக்கத்தை, கட்சியையும், ஆட்சியையும் தினகரன் குடும்பம் தனது இரும்புப்பிடிக்குள் கொண்டுசென்று கபளீகரம் செய்த சூழல் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகத்தான் ஆரம்பித்தார். அம்மாவும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்த்தார். அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் உள்பட ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்தபோதுதான் நான் தர்மயுத்தம் தொடங்கினேன்.

கேள்வி:- ஆறுமுகசாமி கமி‌ஷனில் சம்மன் அனுப்பி இருக்கிறார்களே? எப்போது ஆஜராக போகிறீர்கள்?

பதில்:- ஜனவரி 23-ந்தேதி சம்மன் அனுப்பினார்கள். அன்று உலக முதலீட்டாளர்கள் தினம் இருந்ததால் நானே கடிதம் கொடுத்து மறுதேதியில் விசாரணை கமி‌ஷன் குறிப்பிடுகின்ற தேதியில் நான் ஆஜராகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர்களும் சரி என்று சொல்லி இருக்கிறார்கள். எனக்கும் அதுதொடர்பாக தகவல் சொன்னார்கள்.



அதற்கு பிறகும் 2, 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. அதற்கான காரணம் எனக்கு தெரியாது. தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்திதான் எனக்கு வந்தது. விசாரணை கமி‌ஷன் மூலமாக எனக்கு தகவல் வந்து என்னை அழைத்தால் நான் சென்று உண்மை நிலையை நான் எடுத்துகொண்ட நிலையை அங்கே விரிவாக பேசுவேன். இப்போது பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அங்கே உண்மை நிலை தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அண்ணா நகரில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #ADMK #JayalalithaaDeath #Sasikala #TTVDinakaran
Tags:    

Similar News