செய்திகள்

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?- முக ஸ்டாலின் பேட்டி

Published On 2019-01-02 05:02 GMT   |   Update On 2019-01-02 07:09 GMT
தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #TNAssembly
சென்னை:

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி கிடைக்காததால் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

பின்னர் சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் பேரிடர் 15.11.2018 நள்ளிரவில் நிகழ்ந்தது. மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டும், கஜா பேரிடர் நிதியாக 46 நாட்கள் கழித்து - அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசு 1,146 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கேட்ட 1500 கோடியைக் கூட பெற முடியாமல் அ.தி.மு.க. அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தோல்வி அடைந்துள்ளார்.

இதைக் கேட்டு பெறுவதற்கான துணிச்சல் இல்லாமல் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரத் தகுதி இல்லாதவராக எடப்பாடி பழனிசாமி ஆகி விட்டார். “அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தவறியதால் இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அ.தி.மு.க. அரசின் தொழில் துறை அமைச்சர் சம்பத் தோல்வி கண்டிருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல், தமிழக விவசாயிகளுக்கு பெரும் கேடு விளைவித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இதுவரை தடை பெற முடியாமல்- மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வைக்க முடியாமலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்து இருக்கிறார்.

புதிய எச்.ஐ.வி. தொற்றை தடுப்போம் என்று கூறிய அ.தி.மு.க. அரசு இன்றைக்கு அரசு மருத்துவமனையிலேயே எச்.ஐ.வி. ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கொடுமை அரங்கேறி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் படுதோல்வி அடைந்து இருக்கிறார்.

கார்ப்பரேசன் ஆபிசா அல்லது கரெப்சன் ஆபிசா என்று உயர்நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு தாண்டவமாடும் ஊழலால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தோல்வியடைந்து நிற்கிறார்.

விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண முடியாமல் மின்துறை அமைச்சர் தங்கமணி தோல்வி அடைந்து விட்டார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.


இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல், மத்திய அரசிடம் மாநில உரிமையை பாதுகாத்திட முடியாமல், குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரைக் கூட நீக்க முடியாமல், சட்டம்-ஒழுங்கை அறவே காப்பாற்ற முடியாமல், டெண்டர் ஊழல் என்ற அளவில் முதல்-அமைச்சர் பொறுப்பிலேயே முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். ஒரு நாட்டின் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவர் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்து நிற்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் எடுக்கப்பட்ட பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைச்சரவை. இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் கட்சித் தலைவரை இந்த நாட்டுக்கு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை காக்கத் தவறி இருக்கிறார்கள்.

அவர் மரணத்தில் மர்மம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தான் அப்போதே சொன்னேன். இன்றைக்கு சட்ட அமைச்சராக இருக்கக் கூடிய சி.வி.சண்முகம், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ராமமோகன்ராவ், தற்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாத இவர்கள், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள்? இப்படி எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்ட அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் அடங்கிய அ.தி.மு.க. அரசின் ஆளுநர் உரையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.

பதிலாக தமிழகத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க. அரசின் இந்த ஆளுநர் உரையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த னர்.

வெளிநடப்பு செய்தது குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய வகையில் இழப்புத் தொகை வழங்கவில்லை. மத்திய அரசு மிகக் குறைந்த அளவுதான் நிதி வழங்கியுள்ளது. இது கடலில் பெருங்காயத்தை அளித்தது போன்றதாகும். விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் கவர்னர் உரையில் இல்லை. இவற்றை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

ஜெயலலதா மறைவுக்கு பிறகு அவரது மறைவு குறித்து சட்டத்துறை அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அவரது மரணத்தில் ஏதாவது காரணம் இருந்தால் ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநடப்பு செய்த முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், “கஜா புயலுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசும் அதை பெற தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய விவகாரத்தில் தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைகண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார். #DMK #MKStalin #TNAssembly
Tags:    

Similar News