ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- திருமாவளவன்
நாகர்கோவில்:
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதை விடுதலை சிறுத்தை கட்சி வழி மொழிகிறது. வரவேற்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக சாதி, மத, மோதல், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் தலைமையில் மதசார்பற்ற கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் திருச்சியில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டை நடத்துகிறோம். இதில் பங்கேற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். அவர், பங்கேற்கும் தேதி உறுதி செய்யப்பட்ட பின்னர் மாநாட்டு தேதி அறிவிக்கப்படும்.
கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் தமிழக அரசு, ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. ஒகி புயல் நிவாரணத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் கூட மத்திய அரசு வழங்க விலலை.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்ததற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும். பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக முதல்வர் அறிவிததுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
ஸ்டெர்லைட் விவகாரம், மேகதாது அணை பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #sterliteplant #mekedatu