செய்திகள்
நாகை விவசாயிகளின் தற்கொலைக்கு ஆட்சியாளர்களே காரணம் - டி.டி.வி.தினகரன்
நாகப்பட்டினத்தில் பயிர் கருகிய மனவேதனையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். #Farmersuicide #TTVDhinakaran
நாகப்பட்டினம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று முதல் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கினார்.
நாகை வேளாங்கண்ணி பகுதியில் மக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசும் போது கூறியதாவது:-
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் அவர் வழியில் செல்கிறார்களா? தமிழக மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் ஜெயலலிதா அனுமதித்தது கிடையாது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்து வருகிறார்கள். இதனால் மக்கள் செய்வதறியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவையும், என்னையும் நீக்கினார்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். எங்களுக்கு தமிழக மக்கள் மீது நம்பிக்கை உள்ளது.
கமைடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தியை அறிந்தேன். விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான்.
ஆறு, குளங்கள், மற்றும் நீர்நிலைகளை சரியாக தூர்வாரவில்லை. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியார் பாக்கெட்டுக்கோ போய் சேர்ந்து விட்டது. தடுப்பணையும், ஆறுகளையும், ஏரிகளையும் தூர்வாரி இருந்தால் கடலில் வீணாக தண்ணீர் கலந்திருக்காது.
வருகிற 2019-ம் ஆண்டில் எம்.பி. தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Farmer #Farmersuicide #TTVDhinakaran