செய்திகள்

தமிழக அரசின் ஆயுள் காலத்தை மோடிதான் தீர்மானிக்கிறார்- முத்தரசன் பேட்டி

Published On 2018-09-13 13:11 GMT   |   Update On 2018-09-13 13:11 GMT
தமிழக அரசின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் பிரதமர் மோடி உள்ளார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #pmmodi #tngovt

புதுக்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கேட்பது பணி நிரந்தரம். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் வந்தும் கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையாததால் நேரடி விதைப்பின் மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருகின்றன. கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதற்கும், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்பிதுரை கூறுவது போன்று தி.மு.க.- பா.ஜ.க. இடையே உறவு எதுவும் கிடையாது.


பொதுக்குழுவில் மோடி அரசை வீழ்த்த அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று ஸ்டாலினே கூறியுள்ளார். சொந்த எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் ஆகியோரின் நம்பிக்கையை இழந்து பிரதமரின் தயவால் பழனிச்சாமி அரசு நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறது. தமிழக அரசின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் மோடி உள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #pmmodi #tngovt 

Tags:    

Similar News