இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் கும்பலுக்கு உதவிய ஆட்டோ டிரைவர் கைது
கோவை:
இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.
இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.