இந்தியா

உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் மறுப்பு: காங்கிரஸ் முகத்தில் பெரிய அறை என பாஜக விமர்சனம்

Published On 2026-01-05 20:02 IST   |   Update On 2026-01-05 20:02:00 IST
  • இந்தியாவை பிளவுப்படும சக்திகளின் பிரபல முகங்கள் காலித் மற்றும் இமாம்.
  • அஃப்சல் குருவில் இருந்து உமர் மற்றும் ஷர்ஜீல் வரை நாட்டின் நலனுக்கு எதிரான கும்பலுக்கு காங்கிரஸ் ஆதரவு.

2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது கலவரத்திற்கு சதி செய்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தினார்.

இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட மிகப்பெரிய அறை என பாஜக தேசிய தலைவர் ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளா்.

இது தொடர்பாக பூனாவாலா கூறியதாவது:-

இந்தியாவை பிளவுப்படும சக்திகளின் பிரபல முகங்கள் காலித் மற்றும் இமாம். அவர்களைப் பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் அமைப்பு "அப்பாவி பாதிக்கப்பட்டவர்கள்" என்று சித்தரித்து வந்தது. உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட மிகப்பெரிய அறை. ஜாமீன் மறுப்பு மூலம் அவர்கள் மீதான முதல்கட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதான்.

அஃப்சல் குருவில் இருந்து உமர் மற்றும் ஷர்ஜீல் வரை நாட்டின் நலனுக்கு எதிரான கும்பலுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மன்னிப்பு கேட்டக வேண்டும்.

இவ்வாறு பூனாவாலா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News