போர் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? - வெளியான புதிய தகவல்
- ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் கூறியுள்ளது.
- கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 80 டாலராக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.
ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள ஈரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன இதனால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 80 டாலராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயராது என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்பார்ப்பை விட அதிகமான விலை ஏற்றம் இருந்தால் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் குறித்து மத்திய அரசு பரீசிலனை செய்யும் என்று கூறப்படுகிறது.