பாராமதி விமான விபத்து: விமானி இருக்கையில் உரிமையாளர் தூக்கம் - பகீர் வீடியோ பகிர்ந்த அஜித் பவார் மகன்
- விபத்துக்குள்ளான விமானத்தை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் பராமரித்து வந்தது.
- தந்தையின் மரணத்திற்கு இந்த அலட்சியமே காரணம்.
மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தனது தொகுதியான பாரதமதிக்கு சென்றுகொண்டிருந்தபோது தனி விமானம் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவருடன் விமானிகள் இருவர், உதவியாளர் ஒருவர், விமான பணிப்பெண் ஒருவர் என மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் தான் அங்கம் வகித்த பாஜக கூட்டணிக்கு எதிர் கூட்டணியில் அஜித் பவார் கட்சி போட்டியிட்டது.
உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரம் செய்தார். எனவே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக விபத்துக்குள்ளான விமானத்தின் தகவல்கள் அடங்கிய கருப்புப்பெட்டி சேதம் அடைந்தது அஜித் பவார் மகன் உட்பட பலரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 என்ற அந்த தனி விமான சேவையை வழங்கிய விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் (VSR Ventures) நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் மீது அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம் தான் பராமரித்து வந்தது.
ஜெய் பவார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் உரிமையாளர் ரோஹித் சிங், விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே விமானி இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பது பதிவாகி உள்ளது. இது மற்றொரு விமானம் ஆகும்.
"விமானம் பறக்கும் போது இத்தகைய அலட்சியம் ஏற்புடையதல்ல. இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் மரணத்திற்கு இந்த அலட்சியமே காரணம் என்று கூறியுள்ள ஜெய் பவார், ரோஹித் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் விமான விபத்து விசாரணை வாரியம் சமீபத்தில் வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை குறித்து ஜெய் பவார் மிகுந்த ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை முடியும் வரை விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மகாராஷ்டிரா மக்களுக்கும் விபத்து குறித்த உண்மையான மற்றும் வெளிப்படையான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.