நாக்பூர் வெடி விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 9 பேர் கைது
- வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- நிறுவனத்தின் 21 இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரவுல் கானில் சுரங்கம் மற்றும் வெடி பொருள் உற்பத்தி செய்யும் எஸ்.பி.எல். எனர்ஜி நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 21 இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 9 பேரை கைது செய்தனர்.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்பு தகவல் அமைப்பு ஆகியவற்றின் ஆரம்ப அறிக்கையின்படி, இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், அந்த தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால் அவர்களை அடையாளம் காண குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் டி.என்.ஏ. சோதனைக்காக எடுக்கப்பட்டு வருகின்றன.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.