மத்திய - மாநில உறவு: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவளித்த கர்நாடகா... நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரமும், நிதி சுதந்திரமும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும்.
- குடியரசின் ஒற்றுமை என்பது, ஒற்றைத்தன்மையால் அல்ல, மாறாக அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையால்தான் நிலைபெறுகிறது
மத்திய, மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வின் முதல் பாக அறிக்கை கடந்த மாதம் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு கர்நாடகா முழு ஆதரவு தருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
"கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; அது நமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்டமன்ற விவகாரங்களில் அதிகரித்து வரும் மத்தியமயமாக்கல், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் உத்தேசித்திருந்த அந்த நுட்பமான சமநிலையைச் சிதைத்துள்ளது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரமும், நிதி சுதந்திரமும் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சி, அரசியலமைப்பு மீதான நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை ஆகியவற்றில்தான் இந்தியாவின் வலிமை அடங்கியுள்ளது.
அனைத்து மாநிலங்களும் ஆலோசித்து, நமது கூட்டாட்சி கட்டமைப்பில் சமநிலையை மீட்டெடுப்பதற்கு, 'மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்' (Inter-State Council) போன்ற ஒரு வலுவான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குமாறு ஒன்றிய அரசை நான் வலியுறுத்துவேன்.
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட கர்நாடகா தயாராக உள்ளது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சித்தராமையாவின் இந்த ஆதரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
"தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையின் முதல் பாகம் மீதான வரவேற்பிற்கு சித்தராமையாவுக்கு நன்றி. தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவையும், கூட்டாட்சியை மீட்டெடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் அங்கீகாரத்தையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டது போல, 'இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு குடியரசின் ஒற்றுமை என்பது, ஒற்றைத்தன்மையால் அல்ல, மாறாக அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையால்தான் நிலைபெறுகிறது.' என தெரிவித்துள்ளார்.