கிரிக்கெட்

இவர்கள்தான் ஓபனிங்... இப்படிதான் ஆட வேண்டும்... ஒர்க்அவுட் ஆகுமா கங்குலியின் யோசனை

Published On 2024-04-23 12:00 GMT   |   Update On 2024-04-23 12:00 GMT
  • விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளார்.
  • தங்களுடைய திறமையுடன் அவர்கள் இருவரும் செல்ல வேண்டும். அதிரடி காட்ட வேண்டும். அதுதான் மனநிலையாக இருக்க வேண்டும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. மற்ற வீரர்களை தேர்வு செய்ய வேண்டியதுதான் வேலை.

அவரை எடுக்க வேண்டும், இவரை எடுக்க வேண்டும், அவரை எடுக்கக்கூடாது, இவரை எடுக்கக்கூடாது என கருத்துகள் உலா வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சீனியர் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இன்னும் 10 நாட்களுக்குள் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியை அறிவிக்கப்போகிறது. விராட் கோலிக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்பதுதான் மில்லியன் கேள்வி. ஆனால் ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் முடிவில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அதேவேளையில் அவரது ஸ்டிரைக் ரேட் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது. குறிப்பாக 67 பந்தில் 100 ரன்கள் அடித்தது விமர்சனத்தை எழுப்பியது.

எப்படி இருந்தாலும் ரோகித் சர்மாவுடன் விராட் கோலிதான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறுகையில் "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இருவரும் இருக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட முறையில், இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட பேலன்ஸ்தான் சிறந்த அணி. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அபாரமானவர்கள், ஆட்டங்களின் எண்ணிக்கையால் மட்டும் நான் சொல்லவில்லை. நீண்ட காலமாக அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கூறுகிறேன்.

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரைக்கும் பயம் இல்லாமல் விளையாட வேண்டும். இதை ஏற்கனவே நான் ராகுல் டிராவிட்டிடம் தெரிவித்திருக்கிறேன். ஆடுகளத்திற்கு செல்ல வேண்டும். பந்துகளை எதிர்கொண்டு அதிரடி காட்ட வேண்டும். நீண்ட பேட்டிங் லைன்-அப் உள்ளது. விக்கெட்டுகள் வீழ்ந்தால் கூட, கட்டுப்படுத்த முடியும்.

ரேகித் சர்மா, விராட் கோலியால் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியுமா?. இது மிகப்பெரிய மாற்றம் இல்லை. இதை செய்யக்கூடிய திறமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 50 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ததை பார்த்தீர்கள்.

தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி மிகவும் சிறந்த அணி. முதல் ஏழு முதல் 10 ஓவர் வரை எதிரணி மீது நெருக்கடியை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தினார். அது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி பெருமூச்சுடன் சற்று நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக விளையாட வாய்ப்பு கொடுத்தது.

விராட் கோலியும், ரோகித் சர்மா ஆகியோரால் அதே பாணியில் செயல்பட முடியும் என நினைக்கிறேன். அவர்கள் சிறந்த வீரர்கள். விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளார். தங்களுடைய திறமையுடன் அவர்கள் இருவரும் செல்ல வேண்டும். அதிரடி காட்ட வேண்டும். அதுதான் மனநிலையாக இருக்க வேண்டும். பவர்பிளேயான 6 ஓவருக்குப்பின் என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்போம்.

இந்திய அணியில் ரோகித் சர்மா உடன் ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News