அரியானாவை வீழ்த்தி தனது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது ஜார்க்கண்ட்
- முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அரியானா அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி தனது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.