என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது.
    • பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் கூறும்போது, விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர்.

    இதனால் காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது. அதேநேரம் பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும் என்றார்.

    • சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
    • அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கடந்த 6 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் 3.35 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 9ம் தேதிகளில் இருந்து இன்று மாலை வரை 3,35,150 பயணிகள் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தையும் சேர்த்தால், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

    பொங்கல் முடிந்து ஊர் திரும்புவதற்காக (ஜனவரி 16 - 19) அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


    • சிந்தாந்தரீதியில் அதிமுகவிற்கும் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
    • சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்?

    டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,. 

    திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுகிறாரே என்ற கேள்விக்கு,

    தமிழ்நாட்டில் நான்கு பிரதான கட்சிகள் இருக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ உள்ளது; தமிழக வெற்றிக்கழகம் இருக்கிறது; சீமானின் நாம் தமிழர் உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க திமுகவிற்கு எதிரான வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை அனுபவம் உள்ளது; பிரதமரின் ஆசிர்வாதம் உள்ளது. ஜன.23 அன்று பிரதமரின் தேர்தல் பரப்புரை சென்னை அருகில் தொடங்க உள்ளது. அதனால் எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.

    தலைவர்களை தாண்டி அண்ணாமலையின் எண்ணம் என்ன, விஜய் கூட்டணிக்குள் வருவது குறித்து என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,

    நான் எதுவும் நினைக்கவில்லை. அதற்கான முடிவை தலைவர்கள் எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியின் இலக்கு என்ன என்பதை பார்க்கவேண்டும். சீமானைப் பொறுத்தவரை திராவிட கட்சிகள் வேண்டாம். விஜய் திமுக வேண்டாம் என்றும் நினைத்தால், யார் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எங்களுக்குள் கொள்கை முரண்பாடு இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது. சிந்தாந்தரீதியில் எங்களுக்குள் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    விஜய் வந்தால் உங்கள் கூட்டணி பலம் வாய்ந்ததாகும் என தலைமையிடம் கூறுவீர்களா?

    நான் தலைமையிடம் எதுவும் கூறுவதில்லை. முரண்பாடு இருப்பவர்களை அழைத்து ஒரே இடத்தில் வைத்துக் கொள்வதும் பிரச்சனைதான். எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பினால் கூட்டணிக்குள் கெமிஸ்ட்ரி இருக்காது. விஜய்யின் அரசியல் விஜய்க்கு, எங்களின் அரசியல் எங்களுக்கு.

    நான் விஜய்யை சாதாரணமாக எடைபோடவில்லை. முதல் நாளிலிருந்து இதைக்கூறுகிறேன். அவர் ஒரு மாஸ் ஸ்டார். செங்கோட்டையன் உட்பட நிறைய தலைவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். எல்லா இடங்களிலும் கிளைக்கழங்களை நிறுவிவருகின்றனர். தொண்டர்கள் களப்பணியில் உள்ளனர். அதுபோலத்தான் சீமானும். சீமானை ஏன் குறைத்து எடைப்போடுகிறீர்கள்? நாடாளுமன்ற தேர்தலில் 8.5 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளார். சீமான் இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குவாங்குவார், வெற்றிப்பெறுவார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். யாரையும் லேசாக எடைப்போடக்கூடாது. எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது.

    சீமானின் கட்சி வலிமையானதா?

    யாரையும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பது என்னுடைய கருத்து. எல்லோருமே தலைவர்கள். எல்லோரும் வாக்குகளை பெறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி இத்தனை சதவீதம் வாக்கு வாங்கியுள்ளது என்றால், அதனை தட்டி தூசிபோல் பேசக்கூடாது. அவர்களுக்கும் வாக்குவங்கி, வேறுபட்ட எண்ணங்கள் உள்ளன. மக்கள் மனதிலும் ஓட்டம் உள்ளது. இன்று நான்குமுனை போட்டி உள்ளது. அடுத்த அறுபது நாட்களில் 2 முனை போட்டியாக மாறும்.

    பாமக, தேமுதிக குறித்து பேசாதது ஏன்?

    பாமக எங்கள் கூட்டணியில் உள்ளது. தேமுதிக தனியாக போவதாக கூறுகிறார். மருத்துவர் ராமதாஸ் நல்லமுடிவை எடுப்பார். அதுபோல பிரேமலதா விஜயகாந்தும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன்." என தெரிவித்தார். 

    • அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.

    உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், நமது பண்ணைகளை நிலைப்படுத்தவும், நம் குடும்பங்களை வளர்த்தெடுக்கவும், நமது எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்கும் பூமித் தாய் மற்றும் சூரிய கடவுளுக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    திறமையும், பக்தியும், விடாமுயற்சியும் நிலத்தை வளமாக்கி, வாழ்வை நிலைநிறுத்தும் நமது விவசாய சமூகத்தை இந்நாளில் வணங்குகிறோம்.

    இத்துடன், மாட்டுப் பொங்கலில் பங்கெடுத்து, பண்டிகை உணர்வில் கலந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.

    பழங்கால பாரம்பரியங்களில் வேரூன்றி, தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படும் பொங்கல் பண்டிகை, நமது பாரதிய ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டமாகும். இது எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது.

    காணும் பொங்கல் நன்னாளில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி பண்டிகை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஒரே ஒருமைப்பாட்டின் பல்வேறு விதத்தை பிரதிபலிக்கிறோம் - அதுவே ஒரே பாரதம் உன்னத பாரதம்!

    இந்த பொங்கல் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி வழிநடத்தட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
    • இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று நள்ளிரவு 24 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,390 பஸ்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 1940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம், 6 லட்சத்து 90ஆயிரத்து 720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அத்துடன், இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்து உள்ளார்.

    • 100 நாள் வேலைத் திட்டமான ​மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது.
    • தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது.

    வத்தலகுண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக, அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக நான் ஏற்கனவே எனது விளக்கத்தை முழுமையாகக் கூறிவிட்டேன். இதுபோன்ற கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே உள்ளது. அவர்தான் இதுகுறித்து இறுதி முடிவை அறிவிப்பார். 100 நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. மத்திய அரசு வழங்க வேண்டிய சுமார் 4,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட தொடர் அழுத்தம் மற்றும் போராட்டத்தின் விளைவாக குறைவான தொகை தற்போது பெறப்பட்டுள்ளது. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் 'மகாத்மா காந்தி' என்ற பெயரை மத்திய அரசு நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

    ஆண்டு முழுவதும் விவசாய வேலைகள் இல்லாத சூழலில், ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இத்திட்டத்தில் 240 நாட்கள் கூட வேலை வழங்கப்படுவதில்லை. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.

    அமைச்சர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்குகள் குறித்து கேள்விக்கு, நாங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 15 முதல் 20 முறை சிறைச்சாலைக்குச் சென்று போராடிப் பக்குவப்பட்டுத்தான் ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பதவிக் காலத்தில் நாங்கள் சேர்த்ததாகச் சொல்லப்படும் சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். இதுபோன்ற வழக்குகளால் எங்களது தேர்தல் பணி மற்றும் மக்கள் பணியில் எந்தச் சுணக்கமும் பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்தது தான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகாராஷ்டிராவில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லிவிடுவார். அண்ணாமலை பேசிய இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.

    எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் கூட்டணி போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர, பலப்படுத்த எப்போதுமே முடியாது.

    எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார். நிறைய கட்சிகள் உருவாகி வருகிறது. லெட்டர் பேட் கட்சிகள், அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.

    1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இன்று எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் மாணவர் பட்டாளம் துணிந்து எழுந்து நடத்திய போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு.

    காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் ஆட்சியில் பங்கு தொடர்பாக தற்போது எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவரவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழ்நாட்டிற்கு சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது.

    அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றத்தத்தை தான் ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி பங்கேற்கவில்லை.
    • பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.

    டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.
    • உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள்-தைத்திருநாள்-உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, 3,000 ரூபாய் ரொக்கம் என நமது திராவிட மாடல் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பால் தமிழ் நாடெங்கும் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.

    நானும், இன்று (ஜனவரி 14) சென்னை சங்கமம் கலைவிழா, ஜனவரி 17 அன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் ஆயத்தமாகியுள்ளேன்.

    அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தூய்மைப் பணியாளர்கள்-செவிலியர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றம் என இந்தப் பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையவேண்டும் என மக்களின் மனமறிந்து நமது அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம் ஒன்றாக என நாள்தோறும் நலத்திட்டங்கள் தொடர்கின்றன.

    அடுத்த 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளுக்கும் இப்போதே தயாராகும் வகையில், தமிழ் நாட்டு மக்களிடம் 'உங்க கனவ சொல்லுங்க' என அவர்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை 2030-க்குள் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளேன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் இந்த நல்லாட்சி, திராவிட மாடல் 2.0 வடிவில் தொடர வேண்டும் என மக்களான நீங்களும் மனப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டீர்கள்.

    பொங்கல் திருவிழாவிற்காக வெளியூர் சென்று திரும்புவோர் பாதுகாப்பாக பயணங்களை மேற்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    உழவர் பெருங்குடி மக்களை வணங்கி, புத்தாடை, வண்ணக்கோலம், உறவினர்களைச் சந்தித்து மகிழும் உற்சாகம், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் பண்பு ஆகியவற்றோடு தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
    • இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

    மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.

    இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றது குறித்து காமகிரஷ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு... ஆனா ஜன நாயகன் blocked" என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் சமத்துவப் பொங்கல் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடெங்கும் பொங்கிடும் சமத்துவப் பொங்கலை, தலைமைச் செயலகத்திலும் கொண்டாடினோம்! #பொங்கல்2026 என்று தெரிவித்துள்ளார்.

    • எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.
    • எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சந்தித்து பேசியுள்ளார்.

    எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படத்தை சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் காளை புகும் கணமும் , கிரிக்கெட் மைதானத்திற்குள் தோனி புகும் கணமும் ஆர்ப்பரிக்கும் …மதுரை ஜல்லிக்கட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மதுரை வரும் பயணத்தின் போது விமானநிலைய ஓய்வறையில்!" என்று பதிவிட்டுள்ளார்.

    ×