என் மலர்
செய்திகள்
- உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
- கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு மட்டும்
சம்பந்தப்பட்டதில்லை
எல்லா நிலைகளிலும்
எல்லா வயதினிலும்
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
'பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே' என்று
சங்கத் தலைவி பாடுமிடத்து
உடற்புணர்ச்சி காதலாகிறது
'காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி'
என்று பாடும்பொழுது
கடவுள் பக்தி காதலாகிறது
'காதல் திருமகன்' என்று
தசரதன் தளும்புகிறபோது
பாசம் காதலாகிறது
உதடுகளை மாற்றி மாற்றி
முத்தங்கள் பயணப்படுவதுபோல்
இதயங்களை மாற்றி மாற்றிக்
காதல் பயணப்படுகிறது
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல
இடம் பெயரும்
உயிர்கள் உள்ளவரை
காதல் இருக்கும்
உடலோடு தொடங்கி
உடல் தாண்டி
உயிரில் ஐக்கியமாகிறபொழுது
காதல் தன் புனிதயாத்திரையில்
பூரணம் பெறுகிறது
எல்லாக் காதலுக்கும்
இது நேர்வதில்லை
இன்று விற்பனையாகும்
250 மில்லியன் ரோஜாக்களும்
குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள்
பூக்கவே பூக்கும்;
ஆனாலும் காதல்
மலரவே மலரும்
காதலைத் தடுக்க
நாம் யார்?
தானாய்த் தோன்றித்
தானாய் மறையும்
சந்திர சூரியர்
போன்றது காதல்
வாழ்க காதலே;
பூமியை வாழவை..!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பள்ளி கல்வி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் அவசியம். அதற்காக காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலையை புதுச்சேரி அரசு உருவாக்கி அதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 37 பேர் மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். இது மட்டுமின்றி என்ஜினீயர், செவிலியர் கல்லூரி என அனைத்து கல்லூரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.
இப்போது மாணவர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் 6-ம் வகுப்பில் இருந்து லேப்டாப் கொடுத்தால் எளிதாக இருக்கும் என என்னிடம் கேட்டனர்.
எனவே அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்: நியூ டைனி செக்டர், போஸ்ட் ஆபீஸ் ரோடு 2வது மற்றும் 5வது தெரு, அம்பிட் ஐடி பார்க் ரோடு, 2வது மெயின் ரோடு ஸ்பூத் பேஸ் ஆகிய இடங்கள்.
அம்பத்தூர் சிட்கோ: மாரியம்மன் கோவில் தெரு, குலக்கரை தெரு, கண்ணன் கோவில் தெரு, ஆவின் பிரதான சாலை, ஈபி சாலை 1 முதல் 4வது தெரு, வடக்கு கட்டம் 31ஏ சாலை, வடக்கு கட்டம் 12 மற்றும் 13வது தெரு, கொரட்டூர் டைனி செக்டர் ஆகிய பகுதிகள்.
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம்.
- காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
சென்னை:
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது 'ஸ்பெஷல்' தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் அதிகளவில் கூடுவார்கள்.
காதல் புனிதமானது என்பது காதலர்களின் வேத வாக்காக இருந்தாலும், இது தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரத்துக்கு எதிரானது என்பது இந்து அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது. மேலும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தலாக இருந்து வருகிறது.
எனவே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். இதனால் காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காதலர்களை மிரட்டும், அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோன்று பொதுஇடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார்.
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயற்சி மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார்.
இந்நிலையில், திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க திருப்பத்தூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
இதற்காக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்பத்தூருக்கு வழி அனுப்பி வைத்தனர்.
- பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது.
- காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது.
நாம் எந்தவொரு செயலை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவோம். இதற்கு காரணம், விநாயகரை வணங்கி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.
அவ்வாறு மன்னன் கோவில் கட்ட பாதுகாவலாக இருந்து வெற்றிகரமாக கட்டி முடிக்க அருள்புரிந்தவர் தான் தலையாட்டி விநாயகர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, தலையாட்டி விநாயகர் ஆலயம். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்துள்ளன. இதன் காரணமாகவே இவ்வூர், 'ஆற்றூர்' என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் 'ஆத்தூர்' என்று மருவியுள்ளது.
முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர், சிவ தல யாத்திரை சென்றார். அவ்வாறு வசிஷ்ட நதிக்கரைக்கு வந்த வசிஷ்ட முனிவர், அங்கு பல இடங்களில் தவம் இயற்றினார். மேலும் அவர் தவம் இயற்றிய இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன்படி இத்தலம் வந்து தவம் இயற்றிய வசிஷ்ட முனிவர், திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவதை போல, இங்கும் ஜோதி வடிவில் சிவபெருமானின் தரிசனத்தை காண விரும்பினார்.
அவ்வாறு, அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்பகுதியை கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். மிகுந்த சிவ பக்தனாக இருந்த மன்னன், தினமும் சிவபெருமானை வணங்கிய பிறகே தனது அன்றாட வேலைகளை செய்வான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், "நான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் புதைந்து இருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபடு" என்று கூறினார். அதன்படி இவ்விடத்தை தோண்டும் போது, அதில் ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் ஒரு புதையலும் இருந்தது. அந்த புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். அவ்வாறு இக்கோவிலை கட்டும் முன்பு, இத்தலத்தில் உள்ள விநாயகரிடம் உத்தரவு வாங்கிய பிறகே மன்னன் கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளான். மேலும் இந்த விநாயகரே கோவில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோவில் பணிகள் முடிந்த பிறகு, மன்னன் இந்த விநாயகரிடம் வந்து, "கோவில் பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா" என்று கேட்டான். அதற்கு விநாயகர், 'நன்றாக கட்டி இருக்கிறாய்' என்றும் சொல்லும் விதமாக, 'ஆம்' என்று தனது தலையை ஆட்டினாராம். அதனால் தான் இத்தல விநாயகர், 'தலையாட்டி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள தலையாட்டி விநாயகர், தனது தலையை சற்று இடதுப்புறமாக சாய்த்தபடி அருள்பாலிக்கிறார். இவர் 'காவல் கணபதி' என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள், இவருக்கு வஸ்திரங்கள் சாற்றியும், பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். எந்தவொரு புதிய காரியங்கள் தொடங்கும் முன்பும், இத்தல விநாயகரை வணங்கி வேண்டிக் கொண்டால், அச்செயல் வெற்றி அடையும் வரை நம்முடன் இருந்து சிறப்பாக செய்து முடித்து தருவார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கிரக தோஷங்கள் விலகவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்துக்கு அருகிலேயே தலையாட்டி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
- எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, நேரில் வந்து நலம் விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் T.R.பாலு MP அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாகும்.
- பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும்.
சென்னையில் இன்று உயர்நிலைப்பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அல்லது ஈடுசெய்யும் வேலை நாளாக இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறுவதால் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தில், நீண்ட தூர பயணிகளின் வசதிக்காக இந்த நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இது, முழுமையாக குளிர்சாதனம் செய்யப்பட்ட நவீனமான உள் அலங்காரம் கொண்ட அறையாகும். சொகுசான சோபா செட்கள் மற்றும் சாய்வு இருக்கைகள் கொண்டவை. பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியான நவீன கழிப்பறை வசதிகள்.
மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் அறை வசதிகள் உள்ளன.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டண ஏசி காத்திருப்பு அறைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு தலா ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் கூட்டியே பதிவு செய்யத் தேவையில்லை. நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள பயணிகள் தங்களது பயண வகுப்பு எதுவாக இருந்தாலும், இந்தக் கட்டணத்தைச் செலுத்தி இங்குக் காத்திருக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-2 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி மாலை 4.43 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : பூராடம் இரவு 7 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று சனிப்பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுப்பு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-தெளிவு
கடகம்-வெற்றி
சிம்மம்-கடமை
கன்னி-ஆக்கம்
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- நன்மை
மகரம்-மேன்மை
கும்பம்-உழைப்பு
மீனம்-லாபம்
- வீட்டை சீரமைப்பதற்கு நேற்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.
- இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (வயது 16), முகேஷ் (14). வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அபினேஷ் 11-ம் வகுப்பும், முகேஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இளங்காடு பகுதியில் உள்ள தனது தாத்தா முனியன் வீட்டிற்கு பள்ளி மாணவர்கள் நேற்று காலை வந்தனர்.
முனியன் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டை சீரமைப்பதற்கு நேற்று காலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்தது. வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த அபினேஷ் மற்றும் முகேஷ் மீது வீட்டின் சுவர் விழுந்தன. இதில் இருவரும் இடிப்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சிவாலய வழிபாட்டில் சிந்தையை செலுத்தும் நாள். வருமானம் உயரும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உறவினர்கள் ஒத்துழைப்பு உண்டு.
ரிஷபம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். எதை செய்தாலும் தெளிவாக யோசித்துச் செய்வது நல்லது. முன்னேற்றத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம்.
மிதுனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தனித்து இயங்குவதில் ஆர்வம் கூடும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். பணியாளர்களின் தொல்லை அகலும்.
கடகம்
நண்பர்கள் நல்ல தகவலை தரும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை தரும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கன்னி
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
துலாம்
நந்தி வழிபாட்டில் நலம் கிடைக்கும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்
பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கணிசமான தொகை கைகளில் புரளும்.
தனுசு
நீண்டநாள் பழகிய நண்பர் ஒருவரால் நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மகரம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வருமானம் உயரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. பயணங்கள் பலன் தரும்.






