search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி"

    • ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஜோதி என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் கை எடுக்கப்படவில்லை.
    • பெண்ணுக்கு அளித்த சிகிச்சை தவறு என்று சொன்னால் எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வலது கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோதியை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஜோதி என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் கை எடுக்கப்படவில்லை. உயிரை காப்பற்ற வேண்டும் என்றால் கையை எடுக்க வேண்டுமென அவரிடம் கேட்டு அதற்கு அவர் ஒப்புதல் தெரிவித்த பின்னரே வலது கை அகற்றப்பட்டது. அந்த பெண் தன்னுடைய கணவரிடமே ஒப்புதல் தெரிவித்துதான் கையை எடுத்ததாக கூறினார். வெளியில் உள்ள டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை குறித்து கேட்டறியலாம்.

    எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்துவந்து கூட காட்டுங்கள். பெண்ணுக்கு அளித்த சிகிச்சை தவறு என்று சொன்னால் எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். இது அரியவகை நோய் என்று டெல்லியில் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, பெண்ணின் கணவரிடமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கையை எடுக்கவில்லையென்றால் பெண் உயிர் காப்பாற்றப்பட்டிருக்காது என அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

    ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் மருத்துவ சேவை பத்தவில்லை என்றால் வேறு எந்த மருத்துவமனைக்கு செல்ல ஆசைப்பாட்டாலும் அதற்கான மருத்துவ காப்பீட்டு செலவை நாங்களே ஏற்கிறோம் என சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டோம். பெண்ணின் கணவர் ஆதங்கத்தில் புகார் கூறியதாக தெரிவித்தார்.

    ஆஸ்பத்திரியையும், அதன் சேவையையும் கொச்சைப்படுத்த நினைக்க வேண்டாம். அலட்சியம் நடந்தது தெரியவந்தால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து தான் வருகிறோம். அந்த பெண்ணின் உயிரை காக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இது ஒரு அரிய வகை நோய், ரத்த உறையும் தன்மையுடைய நோய் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு அதிகரித்தால் அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரத்த உறைதல் காரணமாக ஜோதியின் வலது கை மற்றும் 2 கால்களும் கருப்பு நிறத்தில் மிகவும் மோசமாக மாறியது.
    • இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து ஜோதியை கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 13-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்தநாள அடைப்புக்கான அறிகுறி இருந்ததால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தனர். அப்போது, நுண்துளை மூலமாக வலது கை மற்றும் கால்களில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் ரத்த உறைதல் காரணமாக ஜோதியின் வலது கை மற்றும் 2 கால்களும் கருப்பு நிறத்தில் மிகவும் மோசமாக மாறியது. இதனால் ஜோதியின் உயிரை காப்பாற்ற நேற்று முன்தினம் அவரது வலது கையை டாக்டர்கள் அகற்றினர். மேலும், டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் ஜோதியின் வலது கால் காப்பாற்றப்பட்டது.

    இந்தநிலையில் ஜோதியின் இடது கால் கருப்பு நிறமாக மாறியது. இடது காலை பாதுகாக்க டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக ஜோதியின் கணவர் ஜீனத் கூறியதாவது:-

    மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி இருப்பதால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரியில் கூறினார்கள். ஆஞ்சியோ பரிசோதனை செய்ய போதுமான பணம் இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக வந்தோம். சிகிச்சைக்கு பின் ரத்தநாள அடைப்புகள் பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். ஆனால் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக கூறி கை மற்றும் கால்களில் உள்ள சதைகளை வெட்டி எடுத்துள்ளனர்.

    பின்னர் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்றால் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதய பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். இப்போது, என் மனைவியின் கையை எடுத்துவிட்டார்கள். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? எதற்காக ரத்த உறைதல் ஏற்பட்டது? என்பது குறித்து எதுவும் எனக்கு தெரியவில்லை. டாக்டர்களின் தவறான சிகிச்சையால் இது நடந்ததா? என எனது மனைவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த புகார் குறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணிராஜன் கூறியதாவது:-

    நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 2 நாட்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரத்தநாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாத நிலையில், ரத்த உறைதல் நோயால்தான் நெஞ்சுவலி ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ரத்த உறைதலால் வலது கை செயலிழந்து விட்டது, அதனால் முழங்கைக்கு மேல் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து ஜோதியை கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம்.

    சென்னை:

    நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைதொடர்பு இணைப்புகள் மூலம் இத்தகைய மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

    இது சுகாதார சேவைகளை பயனாளிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் உன்னதமான முறையாகும்.

    கொரோனா பேரிடர் காலத்தில், தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்த பரிசாக அமைகிறது.

    இதை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொலை மருத்துவம் எனப்படும் இணைய வழி மருத்துவ ஆலோசனை சேவை மக்களுக்காக சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம் என்று டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

    • குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல்.
    • பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் என்ன கருத்தினைத் தெரிவித்தாரோ அதற்கேற்ப, 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறில்லை' என்று விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அமைச்சரின் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதிலிருந்து விசாரணை அறிக்கை என்பது ஒரு தலைபட்சமானது என்பது தெளிவாகிறது.

    மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தன் ஒன்றரை வயது மகனின் கை அகற்றப்பட்டு, மனம் நொந்து போயுள்ள நிலையில், குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல். இதுவும் கடும் கண்டத்திற்குரியது.

    சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இதுபோன்ற நிலை இருந்தால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் தவறுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • உள் நோயாளிகள் எண்ணிக்கையும், அறுவை சிகிச்சையும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த 6 மாதத்தில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்கான தகுதி பட்டியலில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி முதலிடம் பெற்றுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான செயல்பாட்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் செயல்பாடுகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் ஆய்வு செய்தது.

    ஒவ்வொரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மேற்கொள்ளும் சிகிச்சைகள், பரிசோதனைகள், பிரசவம், ஆபரேஷன் போன்றவை குறித்து ஆய்வு செய்ததில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

    2-வது இடத்தில் சேலம் அரசு மருத்துவமனையும், 3-வது இடத்தில் கோவை அரசு மருத்துவமனையும் பிடித்துள்ளது.

    இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் தேரணி ராஜன் கூறியதாவது:-

    தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள் நோயாளிகள் எண்ணிக்கையும், அறுவை சிகிச்சையும் அதிகரித்துள்ளது.

    அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகள் எண்ணிக்கை 2,200-ல் இருந்து தற்போது 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளின் படுக்கை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 4-ந்தேதி ஒரு நாளில் மட்டும் 389 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 318 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 97 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. 69 பெரிய அறுவை சிகிச்சைகளும், 28 சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டன.

    அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளதால் தான் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோல் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்த விரும்புகிறோம்.

    என்.என்.எஸ். தன்னார்வலர்கள் 50 பேருடன் நாங்கள் இந்த வாரத்தில் ஒரு மணிநேரம் வார்டுகளில் உள்ள மக்களின் உணர் திறனை அறிந்தோம். வார்டுகளுக்கு இடையே பாதையில் உணவு அருந்துதல், குப்பைகளை வீசுதல், எச்சில் துப்புதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களை எடுத்துரைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.
    • கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தற்போதும் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த அளவிலான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.

    கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரிய அளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் தீ விபத்து ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ×