search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Hostial"

    • மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • உள் நோயாளிகள் எண்ணிக்கையும், அறுவை சிகிச்சையும் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக விளங்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த 6 மாதத்தில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்கான தகுதி பட்டியலில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி முதலிடம் பெற்றுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான செயல்பாட்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் செயல்பாடுகள் குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் ஆய்வு செய்தது.

    ஒவ்வொரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மேற்கொள்ளும் சிகிச்சைகள், பரிசோதனைகள், பிரசவம், ஆபரேஷன் போன்றவை குறித்து ஆய்வு செய்ததில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

    2-வது இடத்தில் சேலம் அரசு மருத்துவமனையும், 3-வது இடத்தில் கோவை அரசு மருத்துவமனையும் பிடித்துள்ளது.

    இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் தேரணி ராஜன் கூறியதாவது:-

    தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள் நோயாளிகள் எண்ணிக்கையும், அறுவை சிகிச்சையும் அதிகரித்துள்ளது.

    அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகள் எண்ணிக்கை 2,200-ல் இருந்து தற்போது 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளின் படுக்கை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 4-ந்தேதி ஒரு நாளில் மட்டும் 389 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 318 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 97 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. 69 பெரிய அறுவை சிகிச்சைகளும், 28 சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டன.

    அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளதால் தான் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோல் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்த விரும்புகிறோம்.

    என்.என்.எஸ். தன்னார்வலர்கள் 50 பேருடன் நாங்கள் இந்த வாரத்தில் ஒரு மணிநேரம் வார்டுகளில் உள்ள மக்களின் உணர் திறனை அறிந்தோம். வார்டுகளுக்கு இடையே பாதையில் உணவு அருந்துதல், குப்பைகளை வீசுதல், எச்சில் துப்புதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களை எடுத்துரைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×