search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீர் சேகரிப்பு"

    • சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் புவியியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்தது.
    • சென்னையில் கணிசமான அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

    தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு 945 மில்லி மீட்டர். இந்த அளவு மழை தண்ணீர் மூலம் தமிழகத்தின் பாசன தேவையையும், குடிநீர் தேவையையும் முழுமையாக சமாளிக்க முடியும். ஆனால் அதை சாத்தியப்படுத்த முடியாத நிலைதான் உள்ளது.

    தமிழகத்தில் பெய்யும் மழையில் 35 சதவீதம் ஆவியாகி விடுகிறது. 14 சதவீதம் பூமிக்குள் சென்று விடுகிறது. 10 சதவீதம் மண்ணை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. மீதமுள்ள சுமார் 40 சதவீத மழை தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக வெள்ளப்பெருக்காக மாறி கடலில் கலந்து விடுகிறது.

    இந்த 40 சதவீதம் மழை தண்ணீரில் எவ்வளவு தண்ணீரை பயன்படுத்த முடியுமோ? அவ்வளவு தண்ணீரை பயன்படுத்தி விடவேண்டும் என்ற திட்டத்துடன் கடந்த 2001-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் "மழை நீர் சேகரிப்புத் திட்டம்" கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களில் இந்த திட்டம்தான் முதன்மையான திட்டம் என்று சர்வதேச அளவில் கூட பேசப்பட்டது.

    மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை ஆச்சரியத்தோடு பார்த்த நிலையில் தமிழகம் முழுவதும் வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும், பொது கட்டிடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகளால் மழை நீர் சேகரிப்பு திட்டம் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்தது.

    குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் புவியியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்தது. அருமையான இந்த திட்டம் இன்று கானல்நீர் போல காட்சி அளிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அரசு அதிகாரிகளும் அதை கண்டு கொள்ளவில்லை. பொதுமக்களும் அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை.

    சென்னை நகர மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைப்பதுதான் மழை நீர் சேகரிப்பில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பைப்பை திறந்தால் தண்ணீர் கொட்டுவதால் மழை நீரை சேமித்து வைக்க வேண்டும் என்கிற நினைப்பே கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் போய் விட்டது.

    சென்னையில் சுமார் 20 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி 74.23 சதவீதம் கட்டிடங்களில் மழை சேகரிப்பு இருந்தாலும் அவை முறைப்படி பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. 2021-ம் ஆண்டுக்கு பிறகு அத்தகைய ஆய்வு கூட நடத்தப்படவில்லை. இதனால் மழை நீர் சேகரிப்பு என்பதே இல்லாத நிலைதான் தற்போது சென்னை நகர கட்டிடங்களில் காணப்படுகிறது.

    ஜெயலலிதா இந்த திட்டத்தை கொண்டு வந்த போது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகாரிகள் மழைநீர் சேகரிக்கப்படுகிறதா? என்பதை அக்கறையோடு உறுதிப்படுத்தி கொள்வார்கள். இப்போது அது இல்லை. இதனால் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு குழாய் இருந்தாலும் அதில் வரும் தண்ணீர் நிலத்தடிக்குள் செல்கிறதா? என்பதை யாரும் உறுதிப்படுத்துவது இல்லை.

    சென்னையில் கணிசமான அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதில் இருந்து வெளியேறும் மழை தண்ணீர் முன்பு முழுமையாக சேகரிப்பாக மாறியது. தற்போது அவையெல்லாம் கழிவுநீர் சாக்கடைக்குள் போய் விடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கத்தினரும் அதை கண்டு கொள்வதில்லை.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 90 சதவீதம் மழை நீர் சேகரிப்பு குழாய்கள் பயன்பாட்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதாவது பெரும்பாலான கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு இல்லாமல் போய் விட்டது என்பதை இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பழுதடைந்த குழாய்களை சீரமைத்து புதிய குழாய்களை பொருத்த வேண்டுமானால் கூடுதல் செலவு ஆகும் என்பதால் பல அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர், "அது எதற்கு வீண் செலவு" என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.

    இதே நிலைதான் அரசு கட்டிடங்களிலும் காணப்படுகிறது. அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக்கான குழாய்களை கூட காண முடியவில்லை. பிறகு எப்படி மழை நீரை சேகரிக்க முடியும்? இவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ, மாநகராட்சி அதிகாரிகளோ, சென்னை பெருநகர வளர்ச்சி குழு அதிகாரிகளோ, யாருமே கண்டு கொள்வதும் இல்லை. கண்காணிப்பதும் இல்லை.

    ஒரு கட்டிடத்தில் மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்படாவிட்டால் அல்லது மழைநீர் சேகரிப்பு விஷயத்தில் விதிகள் மீறப்பட்டு இருந்தால் அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இருக்கிறது. ஆனால் அவை திறம்பட செயல்படவில்லை. மழைநீர் சேகரிப்புக்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் அதுவும் திட்டமிட்டபடி நடப்பது இல்லை. சென்னையில் சாலைகளில் வழிந்தோடும் மழை தண்ணீரையும் சேமிக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு துவாரங்கள் போடப்பட்டு உள்ளது. இது தவிர பூங்காக்களிலும் மழை நீர் சேகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள 57 பூங்காக்களில் மழை நீர் சேகரிப்புக்காக ரூ.7.67 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.

    ஆனால் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் மழை நீர் சேகரிப்பு முழுமையாக இல்லை. இதன் காரணமாக சென்னை முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் கவலைப்படும் வகையில் மாறிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக மாதவரம் மண்டலத்தில் அதிகளவு நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டது. ராயபுரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் மிக மிக குறைந்து விட்டது.

    ஜெயலலிதா ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 2 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குழாய்களை போர்க்கால அடிப்படையில் சீர் அமைத்தால்தான் சென்னையில் மீண்டும் நிலத்தடி நீர் மட்டத்தை செழிப்பான ஒன்றாக மாற்ற முடியும்.

    தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளை மிக வேகமாக சீரமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த மாதத்துக்குள் (செப்டம்பர்) இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் எங்கு எல்லாம் மழை நீர் தேங்கும் என்று ஏற்கனவே ஆய்வு செய்து அடையாளம் கண்டுள்ளனர்.

    அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக 223.78 கிலோ மீட்டர் தொலைவுக்கு வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மட்டும் ரூ.761.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மழை காலம் தொடங்குவதற்குள் இவை முடிக்கப்பட்டாலும் கட்டிடங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு திட்டம் சீரமைக்கப்பட்டால் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை 10 சதவீதம் குறைக்க முடியும். எனவே மழை நீர் வடிகால் பணிகளில் காட்டப்படும் வேகம் போன்று மழைநீர் சேகரிப்பு திட்டத்திலும் அதிகாரிகள் ஆர்வம் காட்டினால் சென்னை நகர மக்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

    ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கும் முன்பே பொதுமக்கள் தாமாக முன்வந்து மழைநீர் சேகரிப்பு குழாய்களை சீரமைத்தால் நிச்சயம் சென்னை குளிர்ந்த பூமியாக என்றென்றும் இருக்கும்.

    • ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கை கழுவுதல் நுட்பங்கள், கை கழுவவதின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, கை கழுவுதல் நுட்பங்கள், கை கழுவவதின் பயன்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் டயானா, களப்பணியாளர் அருள் சகாய செல்வி ஆகியோர் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட 14 கிராமங்களில் 64 குக்கிராமங்களில் பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கியிலும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பிரசாரம் செய்தனர். அரசு மருத்துவமனை டாக்டர் அருண்குமார் மற்றும் ஊழியர்கள் வாகன பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

    கடலூர்:

    வேப்பூர் அருகிலுள்ள நகர், நல்லூர், ஐவதகுடி, ஏ, சித்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை மத்திய அரசை சார்ந்த உலக சாதனைக்கான நடுவர் ஆய்வு மேற்கொண்டார். நகர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, சத்துணவு சமையல் கூடம், நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடம் உள்ளிட்ட ஆறு இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்ட யஸ்வந்த்சாய் அதில் தண்ணீர் விட்டு சோதனை மேற்கொண்டார்.

    அப்போது நல்லூர் பி.டி.ஒ., சங்கர், ஜெயக்குமாரி, என்ஜினியர்கள் ராஜேந்தி ரன், சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், துணை தலைவர் ராம சாமி, ஊராட்சி செய லாளர் தங்கவேல் உள்ளிட்டோர் உடனிருந்த னர். நல்லூர் ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அமைந்துள்ள வட்டார சேவை மையம், ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்தார் அப்போது பிடிஒ,இன்ஜினியர்கள் ஆகியோருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உதயக்குமார், , நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன், ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×